Tuesday, December 19, 2017

பேராவூரணி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் தேக்கு மரம் வெட்டிக் கடத்தல்.

பேராவூரணி நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள தேக்கு மரம் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளது. பேராவூரணி சேதுசாலையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் மற்றும் பயணியர் விடுதிசுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் ஒருபுறம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் குடியிருப்பு உள்ளது. நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்தில் தென்னை, மா, பலா, தேக்கு உள்ளிட்ட 50 ஆண்டு பழமை வாய்ந்த மரங்கள் உள்ளன.

அரசு விடுமுறை நாட்களில் இரவு நேரத்தில் இங்குள்ள விலைமதிப்புமிக்க மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.இந்நிலையில் அலுவலகத்தின் வலதுபுறம் நுழைவாயில் அருகே இருந்த தேக்குமரம் அலுவலக ஊழியர்கள் உதவியோடு இரவு நேரத்தில் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளது. இந்த மரத்தின் மதிப்பு சுமார் 1 இலட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளரிடம் அலைபேசியில் கேட்டபோது, முறிந்து விழுந்த வாதாமரம் தான் வெட்டி அகற்றப்பட்டுள்ளது என்றார்.

அகற்றப்பட்டது தேக்கு மரம் தான். அதை உறுதிப்படுத்தும் விதமாக தேக்கு மரத்தின் தூர் பாகம் அகற்றப்படாமல் மண்ணில் புதைந்த படி உள்ளதே. மேலும் தேக்கு மரக்கிளைகள், மரத்துண்டுகள் உள்ளனவே. இதற்கு புகைப்பட ஆதாரம் உள்ளது. முறைகேடாக மரம் வெட்டி அகற்றப்பட்டது உங்களுக்கு தெரிந்துதான் நடந்துள்ளதா?” என நாம் கேள்வி எழுப்பியதும் பதில் ஏதும் சொல்லாமல் அலைபேசியை துண்டித்துவிட்டார்.எனவே இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.




SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: