Sunday, December 24, 2017

பேராவூரணி பகுதியில் பிப்ரவரி மாதம் ரெயில் போக்குவரத்து அதிகாரிகள் தகவல்.

காரைக்குடி-திருவாரூர் இடையே 149 கிலோ மீட்டர் தூரத்துக்கு மீட்டர் கேஜ் ரெயில் பாதை இருந்தது. இந்த வழித்தடத்தில் பேராவூரணி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் இருந்தன. 1902-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி இந்த வழித்தடத்தில் முதன் முதலாக ரெயில் இயக்கப்பட்டது. இந்த நிலையில் நாடு முழுவதும் மீட்டர் கேஜ் ரெயில் பாதைகள் அகல ரெயில் பாதைகளாக மாற்றம் செய்யும் பணிகள் தொடங்கின. இதையொட்டி திருவாரூர்-காரைக்குடி இடையே அகல ரெயில் பாதை பணிகளுக்காக ரூ.1,400 மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக பட்டுக்கோட்டை- காரைக்குடி இடையே 74 கிலோ மீட்டர் தூரத்துக்கு அகல ரெயில் பாதை அமைக்கவும், ரெயில் நிலையங்களை மேம்படுத்தவும், பாலங்கள் கட்டவும் ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டு, கடந்த 2012-ம் ஆண்டு பணிகள் தொடங்கின.

பட்டுக்கோட்டை-பேராவூரணி, பேராவூரணி- ஆயிங்குடி, ஆயிங்குடி-அறந்தாங்கி, அறந்தாங்கி- காரைக்குடி என 4 பிரிவுகளாக அகல ரெயில் பாதை பணிகள் நடந்தன. இந்த பாதையில் 14 பெரிய பாலங்கள், 168 சிறிய பாலங்கள், 35 லெவல் கிராசிங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் நவீன வசதிகளுடன் ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு, 95 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன.

தற்போது பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தண்டவாளங்களின் உறுதித்தன்மை குறித்தும் தண்டவாளங்களின் இணைப்பு குறித்தும் அதிநவீன வசதிகள் கொண்ட என்ஜின் மூலம் ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அகல ரெயில் பாதை பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதால் பட்டுக்கோட்டை-காரைக்குடி இடையே விரைவில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

பட்டுக்கோட்டை- காரைக்குடி அகல ரெயில் பாதை பணிகள் 95 சதவீதம் முடிவடைந்து விட்டன. முன்னதாக மீட்டர் கேஜ் பாதையில் 3 எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 2 பயணிகள் ரெயில்களும் இயக்கப்பட்டன. இதை விட கூடுதலாக ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். பணிகள் முழுமை அடைந்தவுடன் ரெயில்வே உயர் அதிகாரிகள் முன்னிலையில் காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே சோதனை ஓட்டம் நடைபெறும். வருகிற பிப்ரவரி மாதம் பட்டுக்கோட்டை- காரைக்குடி இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: